Sunday, July 1, 2018

அவசர நிலை அன்றும் இன்றும்

42 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் இந்தியாவில் நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டது. அன்றைய பிரதமரான இந்திராகாந்தியின் அரசு இந்திய ஜனநாயகத்தின் மாண்பினை முற்றிலுமாக தகர்த்தெறிந்து சர்வாதிகார குடையின் கீழ் நாட்டை ஆட்சி செய்தது. அவசர நிலை ஆட்சி நடைபெற்ற அந்த 21 மாதங்கள் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் மோசாமான காலகட்டமாக கருதப்பட்டது.

ஜனநாயகத்தின் நான்கு துாண்களாக கருதப்படுபவை சட்டமன்றத் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை, பத்திரிகைத் துறை. இவை சுதந்திரமாகவும் தனித்தன்மையுடனும் செயல்படுவது ஆரோக்கியமான மக்களாட்சிக்கு அவசியம். ஆனால் அவற்றில் தன் கட்டுக்குள் இருந்த முதல் இரு துறைகளான சட்டமன்ற மற்றும் நிர்வாகத் துறைகளை கொண்டு நீதித்துறை மற்றும் பத்திரிககை துறையை தன் பிடிக்குள் வைத்துக் கொள்ள தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டார் இந்திரா.

சர்ச்சைக்குரிய 42வது அரசியல் சட்ட திருத்ததை கொண்டு வந்து சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் அதிகாரங்களை குறைத்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்தார். மினி அரசியல் அமைப்பு சட்டமாகவே கருதப்பட்ட 42வது சட்ட திருத்தம் சிவில் உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் போன்ற அம்சங்களை குழிதோண்டி புதைத்தது. நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான அதிகபகட்ச அதிகார வரம்பு கொண்ட அமைப்பு பாராளுமன்றமா அல்லது நீதிமன்றமா என்ற பெரும் சர்ச்சையை எழுப்பியது 42வது சட்டதிருத்தம். பத்திரிகை துறையின் சுதந்திரம் நசுக்கப்பட்டு, அனைத்து நாளிதழ்களும் தணிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டன. முன்னணி பத்திரிகையாளர்கள் உட்பட அரசுக்கு எதிர்நிலை கருத்து வெளியிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். கருத்து சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் அடக்குமுறை கையாளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளேடுகளின் தலையங்கங்கள் கருப்பு மை தீட்டப்பட்டும், அச்சடிக்கப்படாமல் வெறுமையாகவும் வெளிவந்தன. இதுபோன்று அரசுக்கு எதிர் நின்ற அனைத்து பத்திரிகைகளும் தடை செய்யப்பட்டன. ஜனநாயகத்தின் முதல் துாணான சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்ததன் மூலம் சட்ட திருத்தம் மேற்கொண்டு நீதித்துறை என்ற மூன்றாவது துாணை அடக்க நினைத்தார். இரண்டாம் துாணான நிர்வாகத் துறையின் அங்கமான காவல்துறையின் அதிகாரம் கொண்டு பத்திரிகை துறை என்ற நான்காம் தூணை ஒடுக்க நினைத்தார். அதில் குறுகிய கால வெற்றியும் கண்டார். பின்னர் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகளான எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் ஒன்றிணைந்து நடத்திய நாடு தழுவிய போராட்டமானது இந்திராகாந்தியை தான் போட்டியிட்ட சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளியது.

தற்போது நடைபெற்று வருகின்ற மோடியின் ஆட்சியும் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியாகவே இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். காரணம் கட்சியும் ஆட்சியும் மோடி மற்றும் அமித்ஷா கட்டுக்குள் இருப்பது, இந்திராகாந்தி மற்றும் சஞ்சய்காந்தியின் எமர்ஜென்சி காலத்தோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர்களும், பாஜ மாநில முதல்வர்களும் மோடி மற்றும் அமித்ஷாவின் கட்டளைகளை செயல்படுத்தும் செயல்வீரர்களாகவே இருக்கின்றனர். மாற்று கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலமாக தங்களின் அதிகாரத்தை பிரயோகம் செய்து கொண்டு வருகிறது. 2014 தேர்தலின் போது கூட்டணியில் இருந்த கட்சிகள் பெரும்பாலானவை தற்போது கூட்டணியை விட்டு வெளியே வர மோடி அரசின் இந்த ஒற்றை படை அதிகார போக்குதான் காரணம் என்று கருதப்படுகிறது. மக்களாட்சியில் அனைத்து தரப்பின் குரலுக்கும் சம உரிமை தரப்பட வேண்டும். இங்கு எதிர்க்கட்சிகளின் பங்கும் ஆளும் கட்சிக்கு நிகரானவையே. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததால் மாற்று கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்காமல் செயல்பட்டு வருவது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்தை குலைக்கும். (இது முதல் துாணின் நிலை.)

நம் நாட்டின் தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, ராணுவம் போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகள். இவற்றில் அரசின் தலையீடு பெரும்பாலும் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் சமீப காலங்களில் இவற்றின் தனித்தன்மை குறித்து கேள்விகள் எழத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பாஜ கட்சி உறுப்பினர் அதை அறிவித்தது, வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த சர்ச்சைகள், பணமதிப்பு நீக்கத்தில் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள், ராணுவ தளபதி நியமனம் ஆகியவை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியதே இதற்கு உதாரணம். (இது இரண்டாம் துாணின் நிலை.)

சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக செல்லமேஸ்வர் தலைமையில் மற்ற நீதிபதிகள் போர்க்கொடி தூக்கி பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் குறித்து அவர் சகாக்களே பொதுவெளியில் இதுபோன்று குற்றம் சுமத்தியது இதுவரை நிகழாத ஒன்றாகும். நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்ற நீதிபதியை உடனடி பதவி நீக்கம் (Impechment) செய்யும் அளவிற்கு பிரச்னை பூதாகரமானது. உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுக்கான கொலிஜியத்தின் பரிந்துரையை மறு பரிசீலனை செய்யுமாறு அரசு திருப்பி அனுப்பிய சம்பவம் நீதிபதிகளின் நியமனத்தில் அரசின் குறுக்கீடாக கருதப்படுகிறது. இதுபோல கொலிஜியத்தின் மூலமாக நீதிபதிகளின் நியமனம் குறித்து அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. (இது மூன்றாம் துாணின் நிலை.)

உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு தரவரிசை பட்டியலில் இந்தியா 133வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள் வசைபாடப் படுவதும், தாக்கப்படுவதும், கொடூரமாக கொலை செய்யப்படுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கருத்து சுதந்திரத்தின் குரலுக்கு தன் உயிரையே விலை கொடுக்க நேர்ந்தது. காஷ்மீரின் ஷுஜத் புகாரி அண்மையில் கொல்லப்பட்டதையும் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் 19 பத்திரிகயாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அன்றைய எமர்ஜென்சியில் அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தற்போதைய மோடி அரசின் சித்தாந்தத்திற்கு எதிர் கருத்து கொண்ட ஊடகவியலாளர்கள் மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். நாட்டில் எதிர்கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாத சகிப்பின்மையும் பிரிவினையை உருவாக்கும் வெறுப்பு அரசியலும் தலைதுாக்கி வருகிறது. இதில் அதிக பாதிப்பிற்குள்ளாவது கருத்து ஊடகமாக திகழும் பத்திரிகையாளர்களே. அது மட்டுமில்லாமல் சில ஊடகங்களின் நடுநிலை தன்மையும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. மக்களாட்சியின் மற்ற துாண்களின் கண்காணிப்பாளராக திகழ வேண்டிய நான்காவது துாணின் இன்றைய நிலை இதுவாகும்.

நம் நாட்டில் ஜனநாயகத்தின் நான்கு துாண்களும் தற்போது சுதந்திரமாக செயல்பட முடிகிறதா? என்ற கேள்வியை பெறுப்புணர்வுடன் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.


No comments:

Post a Comment