Sunday, December 9, 2018

விப்ரோ அசிம் பிரேம்ஜிக்கு செவாலியே விருது

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தை உருவாக்கியவர் அசிம் பிரேம்ஜி. தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர் இந்தியாவுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. தன்னுடைய அசிம் பிரேம்ஜி பவுன்டோஷன் தொண்டு நிறுனத்தின் மூலம் செய்த சேவைகளுக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

விருது அறிமுகம்:
செவாலியே விருது 1802ம் ஆண்டு பிரன்ஸ் நாட்டின் அரசனாக இருந்த நெப்போலியன் போனபார்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவில் மற்றும் ராணுவத்தில் சிறப்பாக சேவையாற்றிவர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதை பின்னர் பிரெஞ்சு அரசு சர்வதேச விருதாக மாற்றியது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த பங்களிப்பை நிகழ்த்திக் காட்டியவர்களுக்கு இந்த விருதானது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1995ம் ஆண்டு இந்த விருது வழங்கப்பட்ட பின்னரே செவாலியே என்ற பெயர் தமிழகத்தில் பரிச்சயமானது. டாடா நிறுவனத்தின் ஜேஆர்டி டாடா, விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ், பாடகி லதா மங்கேஷ்கர், இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர் போன்றவர்கள் இதுவரை இந்த உயரிய விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசிம் பிரேம்ஜியின் சேவை:
தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கியது மட்டும் இல்லாமல் தனது சேவை நடவடிக்கைகளாலும் பெரிதும் பேசப்படுபவர் அசிம் பிரேம்ஜி. அசிம் பிரேம்ஜி பவுன்டேஷன் என்ற சேவை நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாநில அரசுகளின் துணையுடன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். 2010ம் ஆண்டு தி கிவிங் பிலேட்ஜ் என்ற சர்வதேச சேவை அமைப்பு அமெரிக்க தொழிலதிபர்கள் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்பெட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. உலகின் பெரிய பணக்காரர்கள் சேவையில் ஈடுபட கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் 5வது ஆளாக 2012ம் ஆண்டு சேர்ந்தவர் அசிம் பிரேம்ஜி. தனது வருமனத்தில் 50 சதவீதத்தை சேவைக்காக அளிப்பதாக உறுதியளித்தார் பிரேம்ஜி. இதுவரை தனது சொத்து மதிப்பில் சுமார் 63 சதவீத தொகையை சேவைக்காக அளித்துள்ளார் பிரேம்ஜி.

விருது குறித்து அசிம் பிரேம்ஜி கூறுகையில், ‘பிரான்ஸ் நாட்டின் இந்த உயரிய கவுரவம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரான்ஸ் நாடு தனது ஜனநாயக வலிமையின் மூலம் உலகுக்கே உந்துசக்தியாக இருக்கிறது’ என்றார்.  

Saturday, December 8, 2018

டின்டர் பூதம் உஷார்


தொழில்நுட்பமும், மேற்கத்திய கலாச்சார தாக்கமும் தான் இந்தியாவை குறி வைத்து துல்லிய தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் புதிய பூதாகர வடிவம் தான் டின்டர் என்ற டேட்டிங் ஆப். ஆம், தற்போது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் ஆப் தான் இந்த டின்டர். டில்லி, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமே தென்பட்ட இதன் தாக்கம் தற்போது இரண்டாம் கட்ட நகரங்களிலும் மெல்ல, மெல்ல உணரப்படுகிறது.

18 வயதுதான் கட்டுப்பாடு:
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போல டின்டரும் ஒரு அப்ளிகேஷன் தான். ஆனால், இது டேட்டிங் ஆப். அதாவது ஆண்கள், பெண்களுக்கு குறிப்பாக இளசுகளுக்கு இடையில் தொடர்பை உருவாக்கி தரும் ஆப் இது. இதை உபயோகிக்க பேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும். பெயர், பாலினம் மற்றும் வயதை பதிவு செய்து தங்கள் போட்டோவை(விரும்பினால்)அப்லோட் செய்தால் போதும். 18 வயது நிரம்பியவர்கள் தான் இந்த ஆப்பை உபயோகிக்க முடியும் என்ற ஒரு கட்டுப்பாடு மட்டுமே. பதிவு செய்தவுடன் ஆப்பில் தனியாகவோ அல்லது இன்ஸ்டாகிராம் மூலமாகவோ உங்கள் புரபைலில் போட்டோக்களை சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் தான் துணைத் தேடும் படலம் தொடங்குகிறது.

உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பொருத்தமான துணையை இந்த ஆப் காட்டிக்கொண்டே போகும். ஸ்கிரீனில் காண்பிக்கப்படும் நபரை பிடித்திருந்தால் வலது பக்கம் ஸ்கிரீனில் ஸ்வைப்(தள்ள)செய்ய வேண்டும். வேண்டாம் என்றால் இடது பக்கம் ஸ்வைப் செய்ய வேண்டும். பின்னர் பிடித்த நபருக்கு லைக் செய்யும் வகையில் இதய வடிவிலான சிம்பலை கிளிக் செய்யலாம். உடனே எதிர் நபருக்கு மெசேஜ் போகும். அவருக்கும் பிடித்திருப்பதாக ஸ்வைப் செய்தால் உடனே அவரை மெஸேஜ் மூலம் தொடர்பு கொள்ளலாம். பின்னர் சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங் முடித்து வைக்கிறது இந்த ஆப். அருகில் இருக்கும் நபரை தேர்வு செய்து காட்டுவதால் நேரடியாக தொடர்புகொண்டு பழக இந்த ஆப் வழிசெய்கிறது. ஆனால், இந்த அப்ளிகேஷனால் சிக்கலில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதால் இளைஞர், இளைஞிகள் கொஞ்சம் உஷாராகதான் இருக்கணும்.
வ.கண்ணன். 

Sunday, November 18, 2018

மக்களாட்சியின் தத்துவம் மலர்ந்த கதை

உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு அடிப்படை தத்துவமான மக்களுக்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கும் மக்களாட்சிக்கான வரையறையாக கருதப்படும் விளக்கம் சுமார் 155 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 19, 1863ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அந்நாட்டின் ‘கெட்டிஸ்பர்க்’ நகரில் நிகழ்த்திய உரை மூலம் வலியுறுத்தப்பட்டது.

உரையின் பின்னணி:

கருப்பின மக்களுக்கான நீதியை மீட்டெடுத்து அடிமை முறையை ஒழித்து, அமெரிக்க அதிபர்களுக்கு மட்டும் அல்லாமல் உலகுக்கே ஆதர்ஷமாக விளங்குபவர் லிங்கன். சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து வாழ்வில் சோதனைகளையும் துயரங்களையும் மனம் தளராமல் கடந்த உலகின் பழமை வாய்ந்த ஜனநாயக நாட்டின் அதிபராக உச்சம் தொட்டவர் ஆபிரகாம் லிங்கன்.

அமெரிக்காவின் 16வது அதிபராக லிங்கன் பதவி வகித்த காலத்தில்தான் அங்கு, கருப்பின மக்கள் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் போரில் ஈடுபடத் தொடங்கினர். 4 ஆண்டுகளுக்கு மேல் நடந்த போரில் தன் மகன், உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் இழந்தபோதும் சளைக்காமல் உழைத்து உள்நாட்டு போருக்குதீர்வு கண்டார் லிங்கன்.

அது மட்டுமின்றி, அமெரிக்க பார்லிமென்ட்டில் 13 வது சட்ட திருத்தத்தின் மூலம் கருப்பின மக்களின் அடிமை நிலையை ஒழித்து புதிய சகாப்தத்தை தொடங்கியவர் லிங்கன். இந்த போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு நிகழ்சி கெட்டிஸ்பர்க் நகரில் நடந்தத. அந்த நிகழ்ச்சியில் தான் உலகப்புகழ் பெற்ற அவரது உரையும் மக்களாட்சியின் தத்துவமாக கருதப்படும் சொற்களும் மலர்ந்தது.

பென்னிஸ்லாவியா மாகாணத்தில் உள்ள கெட்டிஸ்பெர்க் நகரில், உள்நாட்டுப் போரில் உயிரிழந்த 46 ஆயிரம் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டது. தலைசிறந்த பேச்சாளரும் பார்லிமென்ட் உறுப்பினருமான எட்வார்ட் எவரட் கூட்டத்தின் முக்கிய உரையை மேற்கொள்பவராக இருந்தார். சுமார் 2 மணிநேரம் எட்வரட் எவரட் உரையாற்றினார்.

அவரது நீண்ட... உரைக்குப் பின், அதிபர் லிங்கன்சில நிமிடங்களில் வெறும் 273 வார்த்தைகளைக் கொண்ட சிறு உரையை அளித்தார். அந்த உரை உலகில் ஆற்றப்பட்ட தலைசிறந்த உரைகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையின் சாரம் " 87 ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்ட புதிய தேசத்தை கண்டெடுத்தனர். அனைத்து மக்களின் சமத்துவத்தின் லட்சியத்தை கனவாக கொண்டே இந்த தேசமானது உருவாக்கப்பட்டது. மக்களுக்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்களாட்சியானது, இறைவனின் திருடியின் கீழ் என்றும் அழியாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்."
மக்களாட்சி குறித்து மேலே கூறப்பட்ட இறுதி வாசகங்களே பின்னர் ஜனநாயகத்தின் எழுதப்படாத விதியாகவும் விளக்கமாகவும் உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மகத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த சொற்கள் உதித்த தினம் நவம்பர் 19, 1863. அதன் இன்றைய வயது 155 ஆண்டுகள்!.

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் இந்த உள்நாட்டுப் போரையும், 13வது சட்டதிருத்தத்தையும் எப்படி சாதுர்யமாக கையாண்டார் என்பதை "Lincoln" என்ற திரைப்படமாக எடுத்தார். அது சிறந்த நடிகர் உட்பட பல்வேறு ஆஸ்கார் விருதுகளையும், சர்வதேச விருதகளையும் வாங்கிக் குவித்தது.

வ.கண்ணன், திருச்சி.

Monday, November 12, 2018

சர்வதேச விருது பெற்ற குறும்படம், குழந்தைகள் தினமான நாளை ரிலீஸ்

நோபல் நாயகனான கைலாஷ் சத்தியார்த்தியின் பெருமையை பறைசாற்றும் வகையில் அவருடைய சேவை குறித்து சர்வதேச விருது 
பெற்ற குறும்படமான ‘The Price of Free’ குழந்தைகள் தினமான 14ம் தேதி (நாளை) உலகெங்கும் திரையிடப்படவுள்ளது. 

1979ம் ஆண்டு அல்பேனியா நாட்டில் பிறந்து இந்திய மக்களுக்காகவே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து சேவை என்ற சொல்லுக்கு மறுபெயராக திகழ்ந்த அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சரியாக 35 ஆண்டுகளுக்கு பின்னர் 2014ம் ஆண்டு இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசானது அதே அமைதிக்காக கொடுக்கப்பட்டது. யார் அவர் என்று ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்த்தது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக 38 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் கைலாஷ் சத்தியார்த்திதான் அவர். உலகலாவிய அங்கீகாரம் கிடைத்த பின்னர் தான் இந்தியாவில் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்து வருகிறார் என்று அனைவரின் பார்வையும் அவர் மீது விழுந்தது. தனது ‘பச்பன் பசாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பின் மூலம் 1980ம் ஆண்டு தொடங்கி இன்று வரை சுமார் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளை மீட்டெடுத்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து 103 நாடுகளில் 80 ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு பிரச்சார நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐநாவின் யுனஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ துாதுவராக உள்ள சத்தியார்த்தி பாரத யாத்திரை என்ற தலைப்பில் குழந்தை பாதுகாப்பிற்காக 2017ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்கி 35 நாட்களில் சுமார் 19 ஆயிரம் கிலோமீட்டர் துாரம் பயணம் செய்தார் சத்தியார்த்தி.

100 மில்லியன் பிரச்சாரம்:

உலகெங்கும் உள்ள குழந்தைகளின் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் கல்விக்காக எடுக்கப்பட்ட முயற்சியே 100 மில்லியன் பிரச்சாரம். வரும் நவம்பர் 12 முதல் 18ம் தேதி வரை உலக செயல்பாட்டு வாரமாக அறிவிக்கப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களை கொண்டு உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவதே இந்த 100 மில்லியன் பிரச்சார முயற்சி. 

பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வியாளர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்கின்றனர். தனது தீவிர செயல்பட்டின் காரணமாக குழந்தைகளால் போற்றப்படும் கைலாஷ் சத்தியார்த்தியின் சர்வதேச விருதுபெற்ற வாழ்க்கை குறும்படம் குழந்தைகள் தினமான 14ம் தேதி (நாளை) உலகெங்கும் திரையிடப்படுகிறது. இளம் செயல்பாட்டாளராக வாழ்க்கையை தொடங்கிய சத்தியார்த்தி, இந்தியாவில் குழந்தைகளை அடிமைப்படுத்தி கட்டாயமாக வேலைக்கு உட்படுத்திய பலரிடம் போராடி எப்படி சிறார்களை மீட்டெடுத்தார் என்பதை சித்தரிக்கிறது இந்த குறும்படம். ஆங்கிலம் தொடங்கி 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இலவசமாக யுடியூப் இணையதளத்தில் வெளியாகிறது ‘The Price of Free’. இந்த சர்வதேச திரையிடலில் பங்குபெற விரும்புபவர்கள் http://actionweek.100million.org/en/2018/take-part என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

சத்தியார்த்தி பெற்ற முக்கிய விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:(நோபல் தவிர)

*அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.யின் மனிநேய விருது.
* இத்தாலிய செனட் சபையின் தங்கப்பதக்கம்.
*நெதர்லாந்து நாட்டின் தங்கக்கொடி விருது.
*ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதிக்கான விருது.
*பாட்டியூன் நாளிதழின் உலகின் தலைசிறந்த ஆளுமை விருது.

வ.கண்ணன், திருச்சி. 

Saturday, November 10, 2018

செய்தித்துறையிலும் எந்திரன்!


உலகின் முதல் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்ப செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா நியூஸ் நிறுவனம் சீனாவின் தேடல் இணைதளமான Sogou.com உடன் இனைந்து இதை அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் கணிணி ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஆண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்தக் கணினி.

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பின்னணி:

நம் அனைவருக்கும் எந்திரன் படம் பார்த்திருப்போம். அதில் வரும் சிட்டி ரோபோ தான் ஆர்டிபிசியல் இன்டலிஜென்சுக்கு எளிமையான உதாரணம். அதாவது மனிதனைப் போலவே செயல்படும் இயந்திரக் கணிணி தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்சின் அடிப்படை கூறு. ஒரு பணியை செய்ய மனிதனுக்குத் தேவைப்படுகிற நுண்ணறிவு திறனை செயற்கையாக உருவாக்குவது. இயந்திரத்திற்கு மனிதர்களைப் போல பார்க்கும், சிந்திக்கும், பேசும், முடிவெடுக்கும் திறன்களை தருவதே ஏஐ என்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனிதனுக்கு நிகரான புத்தியுள்ள, அறிவார்ந்த கணினி இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்பதே அறிவியலும் பொறியியலும் இனைந்த இந்த துறையின் நோக்கமாகும். சமீப காலமாக மிகப்பெரும் பாய்ச்சலை மேற்கொண்டு வரும் இந்த துறை தற்போது செய்தித் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது.

முதல் ஏஐ செய்தியாளரின் அம்சங்கள்:

கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகானத்தில் நடந்து வரும் 5 வது உலக இணையதள கருத்தரங்கில் இந்த முதல் ஏஐ செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஆண் குரலில் மனிதனுக்குரிய முக பாவனைகளுடன் உண்மை மனிதனை போலவே இந்த செய்தி வாசிக்கும் எந்திரன் செயல்படுகிறார். நேரலை நிகழ்வுகளை ஔிபரப்பில் பார்த்து செய்திகளை தானக வாசிக்கிறார் இந்த எந்திரன். புதிய வரவான எந்திரன் எங்கள் ரிப்போர்டிங் டீமின் உறுப்பிராகிவிட்டார். 365 நாட்களும் 24 மனிநேரமும் செயல்படுகின்ற செய்தியாளர் கிடைத்து விட்டதாக ஜின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது

தொழில் நுட்பங்கள் மனிதனின் கடினமான செயல்களை எளிமையாக்கவே உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அவற்றின் எதிர்வினைகளாக பல வம்புகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் போலி செய்திகள் அதிகமாக பரவி வருவது தற்காலத்தில் சர்ச்சைக் குரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது சீனாவில் முதல் செய்தி எந்திரனாக ஒருவர் உதித்துள்ளார். உடனுக்குடன் உண்மைச் செய்திகளை உலகிற்கு உரைப்போம் என்று தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் நாள்தோறும் கூறிவரும் காலத்தில், தற்போது செய்தி வாசிப்பாளரே செயற்கையாக வந்துள்ளார் விந்தை உலகத்தில்.

வ.கண்ணன், திருச்சி.

Sunday, October 21, 2018

ஸ்டீபன் ஹாகின்ஸ் கடைசி புத்தகம்



கடந்த மார்ச் மாதம் இந்த நுாற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாகின்ஸ் மரணம் அடைந்தார். இயற்பியல் மற்றும் வானியல் தொடர்பான துறைகளில் வியத்தகு ஆய்வுகளை செய்து காட்டிய அவரின் கடைசி புத்தகம் கடந்த தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து அறிவியல் ஆய்வாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதே அந்த புத்தகம். Brief Answer to The Big Questions, அதாவது பெரிய கேள்விகளுக்கு சுருக்கமான பதில்கள் என்ற தலைப்பில் அது வெளியாகியுள்ளது. உலகில் அனைவராலும் கேட்டு விவாதிக்கப்பட்ட 10 முக்கிய கேள்விகளுக்கான பதில்களை அதில் ஹாகின்ஸ் தெரிவித்துள்ளார்.

10 கேள்விகள்:
1)கடவுள் இருக்கிறாரா?
2)பிரபஞ்ச தொடக்கம் எவ்வாறு இருந்திருக்கும்?
3)எதிர்காலத்தை கணிக்க முடியுமா?
4)கால பிரயானம் சாத்தியமா?
5)வேற்று கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது சாத்தியமா?
6)பிளாக் ஹோல்(Black Hole) க்குள் இருபது என்ன?
7)இந்த உலகத்தை அழிவிலிருந்து தடுக்க முடியுமா?
8)வேற்று கிரகவாசிகள் உள்ளனரா?
9)ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மனிதர்களை பாதிக்குமா?
10) புவியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

மேற்கண்ட முக்கிய கேள்விகளுக்கு ஹாகின்ஸ் தனது அறிவியல் பார்வை மூலம் தனது கடைசி புத்தகத்தில் பதிலளித்துள்ளார். எதிர்காலத்தில் கணிப்பொறி இயந்திரம் மனிதர்களை விட (Artificial Intelligence மூலம்)அறிவு வளர்ச்சி பெற்று மனிதர்களையே ஆதிக்கம் செய்யும். மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறி வேற்று கிரகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இது போன்ற அதிர்ச்சி தரும் பதில்கள் மற்றும் விளக்கத்துடன் தற்போது வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ள அந்த புத்தகம்.

அதிகரிக்கும் ஆன்லைன் உணவு மோகம்


இன்றைய இயந்திரமான வாழ்க்கை முறையில் பலருக்கும் வெளியில் சென்று அலைந்து திரிந்து பொருட்களை வாங்க பொறுமையோ, செலவிட நேரமோ இருப்பதில்லை என்பதை விட விருப்பமில்லை என்றே சொல்லலாம். இது போன்றவர்களாலேயே ஆன்லைன் வர்த்தகம் தற்போது அதிகரித்து வருகிறது. செல்போனை திறந்து ஒரு மெசேஜ் தட்டினால் போதும். வீடு தேடி பொருள் வந்துவிடும். எல்கட்ரானிக்ஸ் பொருட்கள், மருந்து வகைகள், ஆடைகள் என்று இருந்த நிலைமாறி இன்று உணவுக்கூட ஆன்லைனில் புக்கிங் செய்யப்படுகிறது.தலையில் தொப்பியுடன் டிசர்ட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் உணவுப்பெட்டியோடு திருச்சி நகரில் அங்குமிங்குமக் சுற்றும் விற்பனையாளர்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர். சென்னை, கோவைப் போன்ற மால் கலாச்சார நகரங்களில் பெரும்பாலும் காணப்படும் இந்த ஆன்லைனில் உணவை வீட்டிற்கு ஆடர் செய்து வாங்கும் பழக்கம் பெருகியுள்ளது. முன்பெல்லாம் பீட்சாவை தான் ஆடர் செய்து வாங்கும் வழக்கம் இருந்து வந்தது. தற்போது பிரியானியில் இருந்து சப்பாத்தி வரை அனைத்து உணவுகளையும் ஆன்லைன் ஆப் எனப்படும் அப்ளிகேஷன்களில் ஆடர் செய்து சாப்பிடத் தொடங்கியுள்ளனர். திருச்சியின் முன்னணி ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு யூபர் ஈட்ஸ்(Uber Eats), ஜோமேட்டோ(Zomato), ஸ்விக்கி(Swiggy) போன்ற ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளது.

நிறுவனங்களின் பின்னணி:

யூபர் ஈட்ஸ்: அமெரிக்க நிறுவனமான யூபர் ஆன்லைன் டாக்ஸி சேவை மூலம் உலகெங்கும் பிரபலமடைந்து தனது வியாபார சந்தையை பெருக்கியது. பின்னர் ஆன்லைன் உணவு விற்பனையை 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்தது. வெற்றிகரமாக செயல்படத் தொடங்கிய இந்த திட்டத்தை 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவின் சுமார் 190 நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் கைகள் தற்போது திருச்சி வரை நீண்டுள்ளது.

ஜோமேட்டோ: 2011 இல் தொடங்கப்பட் இந்திய நிறுவனமான இதன் தலைமையகம் ஹரியான மாநிலம் குருகிரமத்தில் உள்ளது. 2500க்கும் மேற்ப்பட்ட வேலையாட்களை கொண்டு 24 நாடுகளில் இயங்கி வருகிறது இந்த நிறுனவம். இந்தியாவில் மட்டும் 63க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஜோமேட்டோ நிறுவனத்தில் சமீபத்தில் திருச்சியிலும் தடம் பதித்துள்ளது.

ஸ்விக்கி: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஸ்டாட் அப் நிறுவனமான ஸ்விக்கி, இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஆன்லைன் உணவு விற்பனையை தொடங்கி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. புதிதாக இனைந்துள்ள திருச்சியையும் சேர்த்து இந்தியாவில் தனது விற்பனையை நடத்தி வரும் எண்ணிக்கை சுமார் 40.

நேரடியாக ஹோடலில் சென்று சாப்பிடுவதை விட மலிவு விலையில் இந்த உணவு ஆப் நிறுவனங்கள் ஆப்ரில் வழங்குவதால் ஆரம்பத்தில் இந்த நிறுவனங்களுக்கு திருச்சி இளசுகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. டிஜிடல் யுகத்தில் சொகுசு வாழ்க்கைக்கு பழகி அனைவரும் சோம்பேறிகளாக வருவது அனைவரும் அறிந்த கதைதான். அதன் நீட்சியில் தான் ஆன்லைன் உணவு மோகம். போகிற போக்கில் பார்த்தால் ஆடர் செய்த உணவை ஊட்டிவிட ஆன்லைன் மூலம் ஆள் கிடைப்பார்களா என்ற காலம் விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை